செய்திகள்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தருவோம்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி

Published On 2016-04-25 17:11 IST   |   Update On 2016-04-25 17:11:00 IST
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி:

தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தமிழகத்தில் அவரது தலைமையிலான அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களை விளக்கியதுடன் புதுச்சேரியில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் கூறி வாக்கு கேட்டார். அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மக்கள் நலனில் காங்கிரஸ் அரசுக்கும் என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கும் அக்கறை இல்லை. இந்த கட்சிகளின் நிர்வாக திறமையின்மையால் புதுச்சேரி மாநிலம் வீழ்ந்துவிட்டது. வளர்ச்சி என்பது புஸ்வாணமாகிவிட்டது. இவர்களின் ஆட்சியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் அரசு என்றாலே அதுவே மக்கள் விரோத அரசு.

காங்கிரஸ் விரோதி என்றால், என்.ஆர். காங்கிரஸ் துரோகி. காங்கிரசை விட மோசமான கட்சி என்.ஆர். காங்கிரஸ். கூட்டணி தர்மத்தைக் குழிதோண்டி புதைத்தவர் ரங்கசாமி. ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. என். ஆர். காங்கிரசுக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை அகற்றவேண்டும். இதேபோல் காங்கிரஸ்-தி.மு.க. ஊழல் கூட்டணியையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். இதற்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரி பின்தங்கி உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும். புதுச்சேரி மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படும். பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும். மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்படும்.

காரைக்கால் முழுவதும் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப்படும். காரைக்காலில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தொழில் வளாகம் ஏற்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்றவை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News