புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேருக்கு 20–ந்தேதி வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வளர்ச்செல்வன் உள்ளிட்ட 9 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும், இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை அனலை தீவு அருகே சிறைபிடித்துச் சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காரை நகர் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கை மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 9 மீனவர்களையும், இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி, 20 பேரையும் வரும் 20–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகின் உரிமையாளரும், மீனவருமான வளர்ச்செல்வனின் சகோதரி வான்மதிக்கு வரும் 21–ந்தேதி நாகை மாவட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளநிலையில், அவர் உள்ளிட்ட 9 மீனவர்களுக்கு வரும் 20–ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், வளர்ச்செல்வன் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பதத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.