தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் கேபிள் டி.வி உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் சார்பாக தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்தஆலோ சனைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற மே மாதம் 16ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை நிறைவேற்ற இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் கேபிள் டி.வி தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்கள், கேபிள் டி.வி நிறுவனத்தினர் தேர்தல் தொடர்பான விளம்பரத்தை தயாரித்த பிறகு அந்த விளம்பரத்தை ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பித்து மாவட்ட தேர்தல் அலுவலரின் சான்று பெற்ற பிறகு ஒளிபரப்ப வேண்டும்.
அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப கொடுக்கும் கட்டணங்களை காசோலை அல்லது வரைவு காசோலையாக மட்டுமே பெற வேண்டும், எந்தவொரு விளம்பரமும் உரிய அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டால், அது ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரால் அதுகுறித்த விபரம் பெறப்பட்டு, அதனடிப்படையில் மாவட்ட தேர்தல் அலுவலரால் உடனடியாக சம்மந்தப்பட்ட கேபிள் டி.வி நிறுவனத்திற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் –(1951) 127–வது பிரிவின்படி நோட்டிஸ் அனுப்பப்படும். பின்னர் அந்த நிர்வனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.