பெரியபாளையம் அருகே அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
- பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
- லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் உள்ள வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் சவுடு மண் ஏற்றி வருவதாக திருவள்ளூர் துணை தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது முன்னிலையில் பெரியபாளையம் போலீசார் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சவுடு மண் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதனால் அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்த போது வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
திருவள்ளூர் தாசில்தார் சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.