உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2022-06-27 09:47 GMT   |   Update On 2022-06-27 09:47 GMT
  • முருகபாண்டி அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
  • விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

கோவை:

கோவை அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரவீன்குமார் என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - ஆனைகட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியக்கடை வீதி ரோட்டை 50 வயது ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News