உள்ளூர் செய்திகள்

2 விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Published On 2022-07-31 09:21 GMT   |   Update On 2022-07-31 09:21 GMT
  • 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
  • நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் கடந்த 21.6.2000 அன்று விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 64), பிரபாகரன் (65), ஹரிதாஸ் (62) ஆகிய 3 விவசாயிகளை கைது செய்து, கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று கூடலூர் குற்றவியல் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News