கன்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் சரயு அமைத்துள்ளார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில், பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறையினர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர்.
அதில், 25 கிலோ அளவிலான, 600 சாக்கு பைகளில், 15 டன் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தை சேர்ந்த கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கன்டெய்னர் லாரியும் தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.