உள்ளூர் செய்திகள்

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை- தீவிரவாதிகள் போல ஊடுருவிய 11 பேர் பிடிபட்டனர்

Published On 2023-06-30 10:19 GMT   |   Update On 2023-06-30 10:19 GMT
  • காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
  • ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது.

சென்னை:

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 14 கடலோர பகுதிகளிலும் சென்னை முதல் குமரி வரை 'சாகர் கவாச்' என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது. இன்று மாலை வரை ஒத்திகை நடைபெறுகிறது.

கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகை யினை நடத்தி வருகிறார்கள். இப்பாதுகாப்பு ஒத்திகை சம்பந்தமாக கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுக்கு சென்னை கமிஷனர் விரிவான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர் மட்டப் பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் இப்பாதுகாப்பு ஒத்திகையின்போது, காவல் நிலைய எல்லையில் 3 பேர் திருவான்மியூர் எல்லையில் 2 பேர், காசிமேடு துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் மற்றும் துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் என சென்னை பெரு நகர காவல் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மொத்தம் 11 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News