உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.60 லட்சத்தில் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

Published On 2023-04-30 09:07 GMT   |   Update On 2023-04-30 09:07 GMT
  • காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
  • டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஊட்டி,

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.

இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு காமிரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கி ராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது.

ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.

இந்தநிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இதேபோல் டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-

இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன காமிராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.

மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம்.

தற்போது பொருத்தப்படும் காமிராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News