உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வரத்து குறைவால் திண்டுக்கல்லில் 1 கிலோ கத்தரிக்காய் ரூ.100

Published On 2023-11-14 12:51 IST   |   Update On 2023-11-14 12:51:00 IST
  • தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
  • இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளான வடமதுரை, பாடியூர், குளத்தூர், எரியோடு, வேடசந்தூர் ஆகிய பல்வேறு கிராமங்களில் நாட்டு வகை மற்றும் ப்ளூ கத்தரிக்காய் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கள் திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் வழக்கத்தைவிட பாதியாக கத்தரிக்காய் வந்துள்ளது. இன்று 250 கிலோ மட்டுமே வரத்து வந்ததால் கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது.

காந்தி மார்க்கெட்டிலும் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ரூ.90 வரை விற்கப்படுகிறது. சாம்பாருக்கு பயன்படுத்த ப்படும் கத்தரிக்காய் ரூ.100ஐ நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமையலில் கத்தரிக்காயை குறைத்து மற்ற காய்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

தொடர் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News