செய்திகள்
நடிகர் மோகன்லால்

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு - நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை

Published On 2019-09-22 01:41 IST   |   Update On 2019-09-22 01:41:00 IST
வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:

பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அனுமதியின்றி யானை தந்தங்கள் வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகன்லாலுக்கு யானை தந்தங்கள் பரிசாக கிடைத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவுலோஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு வனத்துறையினர் துணை போவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுதொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி கேரள வனத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து நடிகர் மோகன்லால், ஓலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், திருப்புனித்துறாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது கேரள வனத்துறை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் விதிமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர். 

Similar News