செய்திகள்

ஓடும் காரில் நடிகைக்கு பாலியல் தொல்லை - நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் சம்மன்

Published On 2018-03-02 06:35 GMT   |   Update On 2018-03-02 06:35 GMT
ஓடும் காரில் நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீதான வழக்கு விசாரணை வருகிற 14-ந்தேதி தொடங்க இருப்பதால் அவர், எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு காரில் புறப்பட்ட போது கொச்சியில் இருந்து திருச்சூர் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.

ஓடும் காரிலேயே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தை அந்த கும்பல் செல்போனில் பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி நடந்தது.

இது பற்றி நடிகை போலீசில் புகார் செய்தார். விவகாரம் வெளியே தெரிந்ததும் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் பிரமுகர்களும் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகையின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.



இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அவரை சம்பவம் நடந்த 5 மாதங்களுக்கு பிறகு ஜூலை 10-ந்தேதி கைது செய்தனர்.

கைதான திலீப், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நடிகை காரணமாக இருந்தார் என்றும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்திலேயே திலீப் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதனை திலீப் மறுத்ததோடு, தனக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, திலீப்புக்கு கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஜாமீன் வழங்கியது. வழக்கில் சாட்சிகளை கலைக்கக்கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் நடிகர் திலீப்பை 8-வது குற்றவாளியாக சேர்த்திருந்தனர்.



இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை தொடங்க இருப்பதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திலீப்புக்கும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடங்க இருப்பதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News