செய்திகள்

ஆடம்பர கார் வாங்க இங்க வாங்க, ரூ.1 கோடி வரை விலை சேமிக்கலாம்

Published On 2017-07-12 17:24 IST   |   Update On 2017-07-12 17:24:00 IST
இந்தியாவில் விலை உயர்ந்த ஆடம்பர கார் வாங்குவோரை கவரும் வகையில் புதிய வரிமுறை இந்த மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பர கார்களின் விலையில் ரூ.1 கோடி வரை குறைந்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதும் பெரும்பாலான விலை உயர்ந்த கார்களின் விலை குறைந்தது. இந்நிலையில், விலை உயர்ந்த ஆடம்பர கார் வாங்குவோர் மகிழ்ச்சியடையும் வகையில் மகாராஷ்ட்ரா அரசின் புதிய விதிமுறை அமலாகியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் அமலாகியுள்ள புதிய விதிமுறைகளின் படி அதிகபட்ச சாலை-வரி ரூ.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபெராரி, ரால்ஸ் ராய்ஸ், லம்போர்கினி மாடல்களுக்கான சாலை-வரி அதிகபட்சம் ரூ.20 லட்சம் ஆகும். 

முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து 20 சதவிகிதம் சாலை வரியாக செலுத்த வேண்டும். புதிய விதிமுறையால் மகாராஷ்ட்ராவில் விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவோர் பெருமளவு பணத்தை மிச்சம் செய்ய முடியும். இதனால் விலை உயர்ந்த கார்களை வாங்குவோர் மட்டுமின்றி அரசாங்கமும் வரி மூலம் லாபம் ஈட்ட முடியும்.



புதிய விதிமுறைக்கான காரணம் என்ன?

விலை உயர்ந்த கார்களை வாங்குவோர் பெரும்பாலும் புதுச்சேரி, டமன் மற்றும் டியு என யுனியன் பிரதேசங்களில் தங்களது வாகனங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு மகாராஷ்ட்ரா மட்டுமின்றி மற்ற மாநிலங்களை விட வரி குறைவு. 

இதனால் மகாராஷ்ட்ரா போக்குவரத்து அலுவலர்கள் விலை உயர்ந்த கார்களை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்து வரியை பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. புதிய விதிமுறையால் இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதோடு விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவோர் அவற்றை மகாராஷ்ட்ராவிலேயே பதிவு செய்வர்.



மொத்த சேமிப்பு?

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலை உயர்ந்த மாடல்களுக்கு அதிக சேமிப்பு பெற முடியும். இந்தியாவில் விலை உயர்ந்த மாடலான ரால்ஸ் ராய்ஸ் பேண்டம் டிராப்ஹெட் கூப் வரி உள்பட விலையில் ரூ.1.16 கோடிகளை சேமிக்க முடியும். 

புதிய விதிமுறைகளில் லம்போர்கினி அவென்டெடார் ரூ.74 லட்சமும், ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் மாடலுக்கு ரூ.82 லட்சமும், ஃபெராரி F12 பெர்லினெட்டா ரூ.69.8 லட்சம் வரை குறையும். 



புதிய விதிமுறைகள்:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு மகாராஷ்ட்ராவில் அதிகபட்சம் சாலை-வரி ரூ.20 லட்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் மற்ற யுனியன் பிரதேசங்களில் தங்களது வாகனங்களை பதிவு செய்யும் வழக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்ட்ராவை போன்று இங்கும் புதிய விதிமுறை அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News