செய்திகள்

மாருதி சுசுகி வாகனங்களில் ஸ்மார்ட் பிளே அப்டேட்

Published On 2017-07-08 15:05 IST   |   Update On 2017-07-08 15:05:00 IST
மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களிலும் ஸ்மார்ட்பிளே அப்டேட் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின் சில வாகனங்களில் இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி:

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் மற்றும் இக்னிஸ் வாகனங்களில் ஸ்மார்ட்பிளே வசதியை வழங்கி இருந்தது. இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களிலும் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் வசதியை வழங்க இருக்கிறது. 

முதன் முதலில் மாருதி சுசுகி சியாஸ் மாடலில் ஸ்மார்ட்பிளே வசதி ஆப்பிள் கார் பிளே மூலம் வழங்கப்பட்டது. இதே சிஸ்டம் எஸ்-கிராஸ், விராட்டா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் பலெனோ ஆகிய மாடல்களில் வழங்கப்பட்டது. 

புதிய அப்டேட் பெற மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மட்டுமின்றி, நேவிகேஷன் வசதிகளை வழங்க புதிய செயலிகளையும் மாருதி சுசுகி வழங்க இருக்கிறது.



ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே செயலிகள் இரு தளங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகளுக்கு இணைப்பு செயலிகளாக வேலை செய்கிறது. இந்த செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மெசேஜ் அல்லது அழைப்புகளை காரில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் இயக்க முடியும்.

இந்தியாவில் ஆப்பிள் ஐஓஎஸ்-உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலான போட்டி நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே என இரண்டு வசதிகளையும் வழங்குகின்றன.

மேலும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹூன்டாய் நிறுவனங்கள் தங்களின் வாகனங்களில் மிரர்லின்க் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இவை சிறப்பான கனெக்டிவிட்டியாக இருந்தாலும், இது தேர்வு செய்யப்பட்ட சில சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.

Similar News