செய்திகள்
பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் ஊர்வலம் நடந்த காட்சி

ஒப்பந்த தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டும் - ஜி.கே.மணி

Published On 2018-05-01 14:37 IST   |   Update On 2018-05-01 14:37:00 IST
ஒப்பந்த தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். #GKMani #MayDay #LabourDay

ஈரோடு:

பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தையொட்டி மே தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோட்டிற்கு வந்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

மே தினம் தொழிலாளர் தினமாக உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் உன்னததை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உழைப்பாளர்கள், உற்பத்தி செய்வதால் நாட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது. 1890-ல் மே 1 அன்று உழைப்பாளர்களுக்கான உரிமை பெறப்பட்டது. தொழிலாளர்கள் சட்டங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் ஏராளமாக இருந்தாலும் தொழிலாளர்களுக்காக உரிமை பெற முடியாத சூழ்நிலை தான் உள்ளது.

தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் இவர்களும் தொழிலாளர்கள் தான். மத்திய-மாநில அரசுகள் இவர்களின் நிலையை உயர செய்ய வேண்டும்.

மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நிரந்தர பணி இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலை தான் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலை இருக்கக் கூடாது. நீதிமன்றம் வலியுறுத்தியும், இந்த நிலை தொடர்கிறது. எனவே ஒப்பந்த தொழில் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

தற்போது ஒரு கோடி இளைஞர்கள் வேலை இன்றி உள்ளனர். 86 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து சி.என்.சி.கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. மாநில துணை பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம், மாநில துணை தலைவர்கள் வடிவேல், எஸ்.எல்.பரமசிவம், மாநில துணை பொதுச்செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜி.கே.மணி ஊர்வலத்தில் நடந்து சென்றார். ஊர்வலம் கிருஷ்ணா தியேட்டரில் முடிந்தது. #GKMani #MayDay #LabourDay

Similar News