செய்திகள்

குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாதது ஜனநாயக விரோத செயல்- ஸ்டாலின்

Published On 2018-04-28 02:15 GMT   |   Update On 2018-04-28 02:15 GMT
குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாதது ஜனநாயக விரோத செயல் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.#GutkhaScam #GutkhaCBIProbe #MKstalin #MinisterVijayaBaskar
சென்னை:

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி விலகக்கோரி பேரணியாக சென்றதாக கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அவரே தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:- தன்மீது எந்த குறையும் சொல்லப்படவில்லை. நிர்வாக ரீதியாக மிகச்சிறப்பாகவும், வேகமாகவும் வேலை செய்வதாகவும், அதனால் திட்டமிட்டு காழ்ப்புணர்வோடு வழக்கு புனையப்பட்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

தெருவில் செல்லும் குப்பனோ, சுப்பனோ நீதிமன்றத்துக்கு சென்று புகார் சொல்லவில்லை. புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பது வருமான வரித்துறை. இதற்கு அமைச்சரின் பதில் என்ன?

அவர் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர் என்றால், லஞ்சம் வாங்கவில்லை, மடியில் கனமில்லை என்று நினைத்தால், உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா மீது ஒரு குற்றச்சாட்டு வந்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி அவரை அழைத்து, ராஜினாமா செய்ய சொன்னாரே, அதேபோல, தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவான அடுத்த நிமிடமே அவரை ராஜினாமா செய்ய சொன்னாரே, அதுபோல, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சி.பி.ஐ. விசாரணையை சந்திக்கும் ஆற்றலை பெற்று, அவரிடம் நியாயம் இருந்தால் தண்டனையில் இருந்து வெளியேறி, நிரபராதி என நிரூபித்து விட்டு வரவேண்டும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என்பதுதான் என்னுடைய கருத்து.



கேள்வி:- பெரும்பான்மை இல்லாமல் நடக்கும் இந்த ஆட்சியில் இப்படிப்பட்ட ஊழல்கள் நடப்பது தெரிந்து, ஆட்சி தொடர்வதை தடுக்க அடுத்தகட்டமாக தி.மு.க.வின் நடவடிக்கை என்ன?

பதில்:- என்னதான் நாங்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் அடுத்தகட்டமாக, வழக்கு விசாரணையில் வருகின்ற தீர்ப்புக்கு பிறகு அவர்கள் சிறைக்கு சென்று, கம்பி எண்ணுவார்கள். இதுதான் நடக்கும். அதுவரை நாங்கள் பொறுத்து பார்ப்போம். விரைவில் தேர்தல் வரும்போது மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. அமைச்சர்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கிறார்களே?

பதில்:- அவர்களை பொறுத்தவரையிலும், மக்கள் பிரச்சினை, ஊழல் பிரச்சினை என எதுபற்றியும் கவலையில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ‘கமிஷன், கலெக்சன், கரப்ஷன்’ என்பதால் எல்லா துறைகளிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டும் என்பதற்காகவே, லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க. ஆட்சி வந்ததும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு கொள்ளையடித்து கொண்டிருக்கும், கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருடைய பட்டியலும் ஆதாரங்களுடன் எங்களிடம் இருக்கின்றன. எனவே, தி.மு.க. ஆட்சி வந்ததும் முதல் வேலையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைக்கவில்லையே?

பதில்:- லோக் ஆயுக்தாவை அமைத்தால், கிணறு வெட்டி அதற்குள் அவர்களே விழுவது போன்றது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அவர்கள் நிச்சயமாக அமைக்க மாட்டார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். #GutkhaScam #GutkhaCBIProbe #MKstalin #MinisterVijayaBaskar
Tags:    

Similar News