செய்திகள்

இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும்- தினகரன்

Published On 2018-04-04 16:24 IST   |   Update On 2018-04-04 16:24:00 IST
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
கடலூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி எனது தலைமையில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதன்பின்பு ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் விவசாய சங்கங்களுடன் இணைந்து நடைபெறும் போராட்டம் ஆகும்.

மேலும் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் மக்களுக்காக போராடி வருகிறது. இதே போல் ஆளும்கட்சியும் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆனால் ஆளுங்கட்சி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தை மத்திய அரசும், கர்நாடகா அரசும் அர்த்தம் புரியவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் நான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைவரும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்க தமிழக அரசை வலியுறுத்தினோம். ஆனால் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.


தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆட்சி தொடர்வதற்கான காரணம் மத்திய அரசு தான் என அவர்களே கூறியுள்ளனர். அதனால் தான் மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது.

மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது.

தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த சலுகையும் வழங்காமல் குழி தோண்டி புதைக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த எம்.பி.தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும்.

திருச்சி விமான நிலையத்தில் நடந்த முற்றுகை போராட்டத்தை நாங்கள் அறிவிக்கவில்லை. விவசாயிகள் கூட்டமைப்பினர் எங்களுக்கு அழைப்பு விடுத்ததால் நான் கலந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சி எத்தனை நாட்கள் தொடரும் என கேட்டனர்.

அப்போது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி நீடிக்குமா என்பது குறித்து தெரிந்துவிடும் என்றார். #Tamilnews

Similar News