செய்திகள்

தினகரன் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலை இல்லை: கே.பி.முனுசாமி

Published On 2018-01-16 13:05 IST   |   Update On 2018-01-16 13:05:00 IST
இரட்டை இலைக்கும் தினகரன் மற்றும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவர்கள் தனி கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். #TTVDhinakaran
கிருஷ்ணகிரி:

முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி காவேரிப்பட்டணத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை தான் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன் என்பது போல் நடராஜன் பேசியுள்ளார். எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் என்று அவரை நான் எச்சரிக்கிறேன்.

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதை நடராஜன் நிறுத்த வேண்டும் என்று தொண்டர்கள் சார்பில் எச்சரிக்கை உணர்வோடு கேட்டுக்கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சியில் செய்த சாதனைகளை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.

கிருஷ்ணபிரியாவின் கன்னத்தில் அறைவேன் என்று நடராஜன் கூறுகிறார். ஒன்றரை கோடி தொண்டர்களின் மனது புண்படும்படி ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய நடராஜனை எதனால் அடிப்பது என்று தெரியவில்லை. நடராஜன் ஒரு கிரிமினல் என்று எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர் ஆவார்.


அ.தி.மு.க. கொடியுடன் எங்கும் நடராஜன் செல்ல முடியாது. தடுத்து நிறுத்தி விடுவோம். பி.ஆர்.ஓ.வாக இருந்த நடராஜன் உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஏது பணம்? இதை அவர் விளக்க வேண்டும்.

தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை முறையாக பெறுவதற்கு தான் மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறார்கள். பிரதமர் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை தமிழக அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தை வழி நடத்த ஜெயலலிதா எங்களுக்கு கற்று கொடுத்து உள்ளார். பொருளாதார வளர்ச்சியில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் தான் உள்ளது. இது பொருளாதார மேதை என்று கூறும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு தெரியாதா?

தேர்தல் தோல்வி ஏற்படும் போது ஒரு சஞ்சலம் ஏற்படும். அந்த அடிப்படையில் மதுசூதனன் கடிதம் எழுதினார். ஆனால் அனைவரும் ஆர்.கே. நகர் தேர்தலில் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர். இதனால் பிரச்சனை எதுவும் இல்லை. இரட்டை இலைக்கும் தினகரன் மற்றும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவர்கள் தனி கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TamilNews

Similar News