செய்திகள்

ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடக்கிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2017-11-30 06:52 GMT   |   Update On 2017-11-30 06:53 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காவல் துறையினர் மூலம் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடக்கிறது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட் டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் கூறியுள்ளது. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கட்டுமான தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று வாபஸ் பெற்றுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நிறைவேற்றித்தர தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

சமீபத்தில் நடந்த 500 மருத்துவர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பணி நியமன வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வகுப்புவாத சக்திகள் வெற்றி பெறாமல் இருப்பதற்காகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுக்கு தார்மீக ஆதரவை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சமீப காலமாகவே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்து வருகிறது.


இது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் செயலாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காவல் துறையினரை கொண்டு ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கும், வகுப்பு வாத சக்திகளுக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும். மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News