செய்திகள்

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தது தான் மோடி செய்த உருப்படியான காரியம்: இளங்கோவன்

Published On 2017-11-08 13:35 IST   |   Update On 2017-11-08 13:36:00 IST
சென்னையில் கருணாநிதியை மோடி சந்தித்து நலம் விசாரித்ததுதான் உருப்படியான வி‌ஷயமாக சாதனையாக தெரிகிறது என இளங்கோவன் கூறியுள்ளார்.
கோபி:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று தி.மு.க- காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மாநில காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளை அளித்தார். சொன்னபடி எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை. மத்திய ஆட்சியில் சாதனை எதுவும் நடந்துள்ளதா? எதுவும் நடக்கவில்லை.

மோடி செய்த சாதனை மற்ற பிரதமர்களை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்றதுதான் சாதனை.

பணமதிப்பு இழப்புக்கு அவர் என்ன செய்தார்? எந்த கருப்பு பணத்தை ஒழித்தார்? பொது மக்களால் எந்த இடத்தையும் ஏன் அவர்களின் சொந்த இடத்தையே விற்க முடியாத நிலை வந்துள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. காசி முதல் கன்னியாகுமரி வரை மக்களிடம் பணம் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வேதனைப்பட்டு கொண்டு வருகிறார்கள்.


காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது மற்றும் பல சாதனைகள் செய்யப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் ஒரேயொரு சாதனை நடந்து உள்ளது. சென்னையில் கலைஞரை மோடி சந்தித்து நலம் விசாரித்ததுதான் உருப்படியான வி‌ஷயமாக சாதனையாக தெரிகிறது. குஜராத்தில், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் மக்கள் எல்லோரும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக திரும்பி உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்தை கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஒரு அமைச்சருக்கு பிரதமர் பெயரையே தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறி உள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்களுக்கு வாய்பூட்டு ஏன் போட்டார் என இப்போதுதான் தெரிகிறது.

தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. தங்களை காப்பாற்றிக் கொள்ளவே மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது.


நடிகர் கமல்ஹாசன் நல்ல நடிகர். திறமைசாலி. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதே சமயம் அவர் மக்களுக்கு புரியும்படி பேச வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன்.

இன்று மழை வெள்ள சேதங்களை மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் முதலமைச்சரோ சேலத்தில் உட்கார்ந்து கொண்டு மழை வெள்ள சேதத்தை சரிபடுத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறி வருகிறார். இப்படி இருந்தால் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதியை எப்படி பெற முடியும்?

தமிழ்நாட்டில் குளம், குட்டைகளை தூர்வார வில்லை. இதனால் தான் கடுமையான பாதிப்புக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். மணலை பதுக்கி கொள்ளை லாபத்துக்கு ஆளும் கட்சியினர் விற்று வருகிறார்கள். இதனை தடுத்து அனைவருக்கும் மணல் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Similar News