செய்திகள்

தமிழக அமைச்சரவையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜி.கே.வாசன்

Published On 2017-05-29 15:38 IST   |   Update On 2017-05-29 15:38:00 IST
தமிழக அமைச்சரவையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மொடக்குறிச்சி:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகளால் மொடக்குறிச்சி அடுத்த சோலாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பதட்டம், விவசாயிகளின் தொடர் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலையின்மை, எந்த ஒரு திட்டமும் சரியாக நிறைவேற்றாததால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி உள்ளிட்ட குழப்பங்களை மறைக்கவே மாட்டு இறைச்சிக்கு தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இது தனி மனித உரிமையை பறிக்கும் இந்த சட்டம் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தனியார் பால் நிறுவன பாலில் கலப்படம் செய்வதை தமிழக அரசு பால் வளத்துறை அதிகாரிகள், சுகாதாரதுறையினர் இணைந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணல் விலை உயர தட்டுப்பாடுதான் காரணம். தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவசரகால நடவடிக்கையாக மணல் தட்டுப்பாட்டை போக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

டாஸ்மாக் கடைகளை மூட போராட்டம் நடத்துபவர்கள், பெண்களும், சமூக ஆர்வலர்களும்தான். அவர் கள் மீது பொய்வழக்கு போடுவதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உருவபடத்தை சட்டசபையில் திறக்கும் விவகாரத்தில் மற்றவர்கள் அரசியலாக்காமல் அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் சீரான நடைபெற வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.

தமிழக அமைச்சரவையில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நடவடிக்கை இல்லை என்றால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாவட்ட தலைவர் ஆறுமுகம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்தரசேகர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

Similar News