செய்திகள்

அமைச்சர் சரோஜாவை கைது செய்ய வேண்டும்: இளங்கோவன்

Published On 2017-05-12 14:38 IST   |   Update On 2017-05-12 14:38:00 IST
பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அரசு பெண் உயர் அதிகாரியை தமிழக அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

அமைச்சரால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும்.


நீட் தேர்வில் பல்வேறு வரம்புகள் மீறப்பட்டு உள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு எதிராக அத்துமீறல்கள் நடந்து உள்ளது. பெண்களின் மனநிலையை மிகவும் பாதித்து உள்ளது.

மின்னணு வாக்கு பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி மற்றும் மாயாவதி போன்ற தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். டெல்லியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆகவே பழைய ஓட்டு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ்-2 முடிவில் புதிய முறையை அறிவித்துள்ளாரே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அவர் (செங்கோட்டையன்) என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.

Similar News