செய்திகள்

மின்வாரிய உதவிபொறியாளர் பதவிக்கு ஒளிவு மறைவின்றி நேர்காணல்: அமைச்சர் தங்கமணி

Published On 2017-03-15 09:46 GMT   |   Update On 2017-03-15 09:46 GMT
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பதவிக்கான நேர்காணல் ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பதவிக்கான நேர்காணலை தனியார் ஓட்டலில் நடத்துவதாக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறாகும். நேர்காணலுக்கு வருபவர்களுக்கு சிற்றுண்டி,தேனீர் கொடுக்க வேண்டும். உட்கார இடவசதி வேண்டும். சாமியானா போட வேண்டும். இதை செய்யாவிட்டால் குறை சொல்வார்கள்.

இதற்கு சரியான இடம் இல்லாததால் ஓட்டலில் நேர்காணல் நடக்கிறது. எங்கு நடைபெற்றாலும் நேர்மையாக நேர்காணல் நடக்கும். 375 மின் வாரிய பதவிகளுக்கு ஒளிவு மறைவின்றி நேர்காணல் நடக்கிறது. விதிகளுக்கு உட்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறும் நேர்காணல் மீது யாராவது ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்காணலுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காகதான் ஓட்டலில் நேர்காணல் நடக்கிறது. இதை பாராட்டுவதை விட்டு குற்றச்சாட்டு கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

தமிழ்நாட்டிற்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் தேவை. ஆனால் இப்போது 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் மின்வெட்டு நிச்சயமாக இல்லை. டிரான்ஸ்பர் பழுது காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கலாம். அதை மின்வெட்டு என்று கூற கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News