செய்திகள்
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் நீடிக்காது: ராமதாஸ்

Published On 2017-02-17 10:08 IST   |   Update On 2017-02-17 10:08:00 IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் நீடிக்காது என கடலூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியுள்ளார்.
கடலூர்:

கடலூர் வடக்கு, கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன் தலைமை தாங்கினார்.

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் பொம்மை மந்திரிசபை, பினாமி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ளது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்காது.

ஆனால் இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். கொள்கை பிடிப்புடன் என்று நினைத்து விடாதீர்கள், ஊழல் செய்வதில் ஒற்றுமையாக இருப்பார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் தான் ஆட்சி செய்தது.

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிடும் போது, தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் ஊழலை சாதாரணமாக்கி விட்டார்கள். அதை மக்கள் கண்டுகொள்ளாமல் செய்யும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள். உயிர்கொல்லி நோயான ஊழலின் பிடியில் இருந்து சமுதாயத்தை மீட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளேன் என்று அன்புமணி தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார்.

எனவே புதியதோர் தமிழகம் செய்ய ஊடகங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான முற்போக்கு சக்திகள் எங்களுடன் இணைய வேண்டும்.

நாங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து செல்லப்போகிறோம். அனைத்து சமுதாய மக்களும் பா.ம.க.வை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில் அன்புமணி ராமதாஸ் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார். எனவே அடுத்து வரும் தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Similar News