செய்திகள்
ஈரோட்டில் இளங்கோவன் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

89 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை சசிகலா சிறை வைத்துள்ளார்: இளங்கோவன்

Published On 2017-02-13 15:54 IST   |   Update On 2017-02-13 16:06:00 IST
89 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை சசிகலா சிறை வைத்துள்ளார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈரோடு:

தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போதிய மழை இல்லாமல் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசும் கவர்னரும் தடுத்து நிறுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தின்போது வாக்குறுதி கொடுத்தார். அதனை நிறைவேற்ற உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் யாரை முதல் அமைச்சராக்க பதவி ஏற்க அழைப்பது? என்று கவர்னர் முடிவு செய்வதில் ஏற்படும் தாமதத்துக்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஏனென்றால் சசிகலா ஏற்கனவே குற்றவாளி என்று கீழ்கோர்ட்டால் தீர்ப்பு கூறப்பட்டது.

இன்னும் நான்கைந்து நாட்களில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை காத்திருந்து முதல்-அமைச்சர் பதவி ஏற்க அழைக்க வேண்டும்.

சசிகலா பெண் தாதா போல் செயல்படுகிறார். 90 எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்துள்ளது, சிறை வைக்கப்பட்ட இடத்தை சுற்றி குண்டர்களை நிறுத்தி உள்ளது, செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களை தாக்குவது, அவர்களது செல்போன்களை பறிப்பது போன்ற நடவடிக்கைகளினால் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் சிரிப்பதுபோல் தரக்குறைவாக நடத்தி காட்டுவது ஆகியவற்றால் சசிகலா ‘‘பெண் தாதா’’ போல் செயல்படுகிறார்.

மற்றும் மிரட்டுவது தமிழ்நாட்டு மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு நடப்பதும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சசிகலா நடவடிக்கையை கிராம மக்கள் மற்றும் படித்தவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்ப்பு கூறும் வரை ஆட்சி அமைக்க கவர்னர் தாமதப்படுத்துவது தவறு இல்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசின் கருத்து அவரது சொந்த கருத்தாகும். இதுபற்றி நானும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, முகில் வார்னிஷ் போன்றவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு அனுப்புவது தொடர்பாக கவர்னர் தாமதம் செய்வதில் தவறு இல்லை என வலியுறுத்தி உள்ளோம். கட்சி தலைமையும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல்-அமைச்சர் ஆக சசிகலா தகுதியானவரா? என்று கவர்னர் ஆலோசனை நடத்த வேண்டும். இதன் பிறகே அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்க அழைப்பு அனுப்புவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரசை பொறுத்த வரை இது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையாகும். சசிகலாவுக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ எங்கள் ஆதரவு கிடையாது. எங்களது கூட்டணியான தி.மு.க. எடுக்கும் முடிவை பொறுத்து எங்களது முடிவு இருக்கும்.

சுப்பிரமணியசாமிக்கு அ.தி.மு.க. மகளிர் அணி மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அவருக்கு கோர்ட்டில் மகளிர் அணி கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஆகும்.

இப்போதுள்ள சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ள பா.ஜனதா நினைக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் இப்போது கால் ஊன்ற முடியாது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Similar News