செய்திகள்

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை: விக்கிரமராஜா

Published On 2017-02-13 15:51 IST   |   Update On 2017-02-13 15:51:00 IST
தமிழ்நாட்டில் தற்போது என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது என விக்கிரமராஜா கூறினார்.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட், கனிமார்க்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கவர்னர் முன்வர வேண்டும். சரியான ஆட்சியை கொண்டுவர அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானி ஆற்று குறுக்கே கேரளா அணைகட்ட அனுமதிக்க கூடாது. இதற்காக போராடும் விவசாயிகளுக்கு பேரமைப்பு ஆதரவு அளிக்கும் வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பருகுவதை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

வெளிநாட்டு குளிர் பானங்கள் பருகக்கூடாது என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்குகிறது.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

கூட்டத்துக்கு சங்க தலைவர் ஆர்.கே. சண்முக வேல் தலைமை தாங்கினார். அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சிவநேசன், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட பொருளாளர் ராஜகோபால், துணைத்தலைவர் எஸ்.பொன் நாராயணன், கொங்கலம்மன் அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News