பெரும்பான்மை உள்ளவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்: கவர்னருக்கு திருமாவளவன் கோரிக்கை
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் நிலவரம் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பொறுப்பு கவர்னர்தான் உள்ளார். உடனே தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்கவேண்டும். தற்போது நடைபெறும் அரசியல் சூழ்நிலையில் கவர்னர் முடிவு ஏதும் தெரிவிக்காமல் தாமதப்படுத்துகிறார்.
எம்.எல்.ஏ.க்களை கவர்னர் தனித்தனியாக அழைத்து விசாரிக்கக்கூடாது. அது ஜனநாயக விதி முறைக்கு உட்பட்டது கிடையாது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவரை உடனே ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். தாமதப்படுத்தக்கூடாது.
கடந்த சில மாதங்களாக அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர், கடலூர் மாவட்டம் மா.புடையூர் ஆகிய பகுதிகளில் தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
சிறுகடம்பூரில் நந்தினி என்ற தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். அப்போது நந்தினி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். உடனே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும்.
இதேபோல் தமிழகம் முழுவதும் தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்பவர்களை அழைத்து சமாதானப் படுத்தி போலீசார் அனுப்பிவைக்கின்றனர். இதை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.