செய்திகள்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் மனு

Published On 2017-02-10 08:36 GMT   |   Update On 2017-02-10 08:36 GMT
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கும் படி அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு இன்று மனு அனுப்பி இருப்பதாக அறிவித்தார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கும் படி அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு இன்று மனு அனுப்பி இருப்பதாக அறிவித்தார்.

இதுபற்றி மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மதுசூதனன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். கொடி கட்டும் தொண்டன் தான். கட்சியின் நாடி நரம்பு எல்லாமே அவன்தான். அவன் ஆடினால் ஆட்சியே ஆடும் என்றார்.

கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கென்று தனி விதிமுறைகள் உள்ளன. கட்சியின் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவிக்கே இடம் கிடையாது.

கட்சி நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்ட சசிகலா 2012 மார்ச் 31-ந்தேதி தான் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ஆட்சியில் சேர்ந்தார். அந்த கடிதத்தில் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். அக்காவுக்கு (ஜெயலலிதாவுக்கு) உதவி செய்யவே வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கட்சியின் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் அடிமட்ட தொண்டராக இருக்க வேண்டும் என்பது விதி. எனவே சசிகலா இந்த பொறுப்புக்கு தகுதி அற்றவர் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவரது பொதுச் செயலாளர் பொறுப்பை தேர்வை ஏற்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News