செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.10 கோடி பேரம்?

Published On 2017-02-10 06:06 GMT   |   Update On 2017-02-10 06:06 GMT
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை தரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

அது தமிழ்நாட்டில் தற்போது ஓசையின்றி அரங்கேறத் தொடங்கி உள்ளது.

பெரும்பாலான எம்.எல். ஏ.க்களை தற்போது சசிகலா தரப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை ஓரளவுக்கு மேல் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சிலர் பேரம் பேசத் தொடங்கி உள்ளார்களாம். “என்ன வேண்டும், செய்து தருகிறோம்” என்று பேரத்தைத் தொடங்கி உள்ளார்களாம்.

பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் கிடைத்த வரை லாபம் என்ற மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆதரவு அளிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என்று பேரம் பேசப்படுவதுதானாம்.

அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை தரப்படும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு ஆசை காட்டப்பட்டுள்ளதாம். தமிழக அரசியல் வரலாற்றில் இத்தகைய பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது இல்லை என்கிறார்கள்.

சில எம்.எல்.ஏ.க்கள் பணத்தை ஏற்க மறுத்து விட்டனர். அதற்கு பதில் அவர்கள் அனைவரும் அமைச்சர் பதவி கேட்கிறார்களாம்.

சில எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்ட இலாகாவை குறி வைத்து கேட்பதாக சொல்லப்படுகிறது. இது எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

பேரம் பேசப்பட்டதன் காரணமாக பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. அது அவர்களை திசை மாற்றாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளித்து வருபவர்கள் நம்புகிறார்கள்.

என்றாலும் குதிரை பேரத்தையும் மீறி சில எம்.எல். ஏ.க் கள் ஓட்டம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

Similar News