செய்திகள்

சென்னையில் இன்று மாலை தீபா, மீண்டும் ஆதரவாளர்களை சந்திக்கிறார்

Published On 2017-01-28 10:12 GMT   |   Update On 2017-01-28 10:12 GMT
சென்னையில் இன்று மாலை தீபா தனது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். இதில் கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தி.நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். அவர்கள் மத்தியில் தீபா பேசினார்.

தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான கடந்த ஜனவரி 17-ந்தேதி தனது வீட்டில் பேட்டியளித்த தீபா, ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திப்பேன் என்றும் கூறினார்.

தீபாவை சந்திக்க கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர்கள் 2 நாட்களாக காத்து இருந்தனர். இன்று மாலை தீபா தனது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.

இதில் கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள். அப்போது தீபாவிடம் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதையடுத்து தீபா வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து உள்ளனர்.



இந்த நிலையில் சில மாவட்டங்களில் தீபா பேரவையில் சேர பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தீபா வீட்டு முன்பு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பொறுப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக யாரையும் அணுக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Similar News