ஜல்லிக்கட்டு வன்முறைக்கு மாணவர்கள் காரணம் அல்ல: ஜி.கே. வாசன் பேட்டி
நாகப்பட்டினம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வேளாங்கண்ணி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
சட்டப் பேரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையை தமிழக அரசு சுமூகமாக தீர்க்கவில்லை. போலீஸ் நிலையத்தை எரித்தது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல. சமூக விரோதிகள் சிலர் தான் ஊடுருவி இந்த செயல்களை செய்துள்ளனர்.
அவர்களை கண்டறிந்தது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்ட வேண்டும்.
அதில் கடந்த ஒருவார காலமாக நிலவிய சூழல், பிரச்சினைக்கு காரணம், விவசாயிகள் பிரச்சினை, தமிழக பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து எதிர் கட்சிகளிடம் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.