செய்திகள்

காவலர் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Published On 2016-12-28 02:35 GMT   |   Update On 2016-12-28 05:57 GMT
காவலர் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வந்த கோபிநாத் என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக காவல்துறையில் மொத்தமுள்ள 1,21,168 பணியிடங்களில், 97,512 பேர் மட்டுமே இந்த ஆண்டு தொடக்கத்தில் பணியில் இருந்தனர். 23,656 பணியிடங்கள் காலியாக இருந்தன.

மொத்தப் பணியிடங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான இடங்களை காலியாக வைத்திருந்தால், காவலர்களின் பணிச்சுமையும், அதனால் மன உளைச்சலும் ஏற்படுவதை எவரும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை அடுத்த சில மாதங்களில் முழுமையாக நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News