செய்திகள்

ராமமோகனராவ் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள்: இல.கணேசன் எம்.பி. பேட்டி

Published On 2016-12-27 11:10 GMT   |   Update On 2016-12-27 11:10 GMT
ராமமோகனராவ் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

மதுரை:

மதுரையில் இன்று இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது அவரது பிறந்தநாளன்று அக்னி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியா வல்லரசாக மாறுவதற்கான எடுத்துக்காட்டு.

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி நகை, பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடத்தப்பட்டது தவறு என ராமமோகனராவ் கூறி உள்ளார். அவருக்கு அதை கூற தகுதியில்லை.

மேலும் முழுபங்கும் யாருக்கு சென்றது என அவர் சொன்னால், கருணை காட்டப்படலாம். பாவ விமோசனம் கிடைக்கும்.

அவர் மீது ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அப்படி இருந்தும் அவர் எப்படி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது வியப்புக்குரியது. தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் சொல்வது மக்களிடம் எடுபடாது. அவரது பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள்.

மேலும் இந்த சோதனையை அரசியலாக பார்க்கக்கூடாது. சோதனையை சம்பவமாகத் தான் பார்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டை நடத்த பாரதீய ஜனதா முழு முனைப்பு காட்டி வருகிறது. இதனை சிலர் விமர்சனம் செய்வது சரியல்ல. பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வந்தார். ஆனால் ஜல்லிக்கட்டை பற்றி தெரியாதவர்கள் காளைகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் விசாரணை முடிந்து விரை வில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.

ஜல்லிக்கட்டை அரசியலாக்க நினைத்து தி.மு.க.வும், காங்கிரசும் போராட்டம் நடத்த இருப்பது சரியல்ல. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. எனவே இதை பற்றி பேச அவர்களுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News