செய்திகள்

இலங்கை அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டத்தை தடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

Published On 2016-12-12 10:40 IST   |   Update On 2016-12-14 17:08:00 IST
இலங்கை அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவை தமிழகம் என்றும் மறக்காது. தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அவர் வகுத்த பாதையில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செல்ல வேண்டும். மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் சித்ரவதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அரசு அடுத்த மாதம் புதிதாக ஒரு சட்டத்தை கொண்டுவர உள்ளது.

தவறுதலாக எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதற்காகவும், அவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிப்பதற்காகவும் அந்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அந்த சட்டத்தால் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, அந்த சட்டத்தை கொண்டு வரவிடாமல் தடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி, வருகிற 16-ந்தேதி ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன். தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதையும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Similar News