செய்திகள்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2016-11-14 08:41 GMT   |   Update On 2016-11-17 08:36 GMT
ரூ.1000, ரூ.500 செல்லாது என்ற அறிவிப்பால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பண மற்றும் பரிசுப் பொருட்கள் ஏராளமாக வழங்கியதால், இந்த இரு தொகுதிகளிலும் நடைபெற இருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வேட்பாளர் இறந்து விட்டார். இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 19ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் எல்லாம் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.ஏ.சாதிக் அலி சார்பில் டெல்லியை சேர்ந்த மூத்த வக்கீல் கே.டி.துள்சி ஆஜராகி, ‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக என் கட்சிக்காரர் சாதிக்அலி தொடர்ந்த வழக்கு இன்று 14வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

தற்போது மத்திய அரசு ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறும் தேர்தலை பயன்படுத்தி அரசியல்வாதிகள் தங்களது கருப்பு பணத்தை இங்கு செலவழிக்க முயற்சிக்கின்றனர்.

எனவே, இந்த தொகுதிகளில் நடைபெறும் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும். அதுதொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘இந்த புதிய இடைக்கால மனுவை நீங்கள், ஐகோர்ட்டு பதிவுதுறையில் தாக்கல் செய்து விட்டீர்களா? என்பது தெரியவில்லை. தாக்கல் செய்திருந்தால், அந்த வழக்கு ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இல்லையென்றால், இந்த வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது’ என்று கூறி விட்டனர்.

Similar News