செய்திகள்

விவசாயிகள் தற்கொலை விரும்பத்தகாத ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2016-11-07 07:54 IST   |   Update On 2016-11-07 07:54:00 IST
விவசாயிகள் தற்கொலை விரும்பத்தகாத ஒன்று என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பத்தகாத ஒன்று. பிரதமர் மோடி விவசாயிகள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் விவசாய, கிராம முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

மோடி மீனவர் பிரச்சினையில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளார். இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாட்டு வெளியுறவு துறை, மீன்வளத்துறை மந்திரிகள், அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இரு நாட்டு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள், 6 மாதங்களுக்கு ஒரு மந்திரிகள் கூட்டம் நடத்தப்படும். மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு பற்றி பேசப்பட்டது. நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட இருக்கிறது. மீனவர்கள், படகுகள் விடுப்பு குறித்து டிசம்பர் மாத இறுதியில் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜனவரி மாதம் 2-ந் தேதி மந்திரிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ராகுல்காந்தி இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி முன்னேறாது. ராகுல்காந்தியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியுமா?... காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பேசலாமா?...

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News