செய்திகள்

தினம் ஒரு கருத்து சொல்வார்: வைகோ மீது பிரேமலதா தாக்கு

Published On 2016-11-06 13:29 IST   |   Update On 2016-11-07 16:55:00 IST
வைகோ தினமும் ஒரு கருத்து கூறுவார். அவர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பிரேமலதா கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடக்க உள்ள 3 இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. தே.மு.தி.க. பிரசாரத்தை இன்று முதல் தொடங்குகிறோம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நடக்க இருக்கும் 3 தொகுதி தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் மற்ற 2 தொகுதிகளில் நடப்பது மறு தேர்தல் இது தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல்.

ஏனென்றால் பணபட்டு வாடா பெரும் அளவில் நடந்ததினால் 2 தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் நல்ல முறையில் தேர்தலை நடத்தினால் தே.மு.தி.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.

இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆதரவு இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் உள்ளவர்.

தினமும் ஒரு கருத்து சொல்வார். அவர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவரே. இப்போது விமர்சனங்களை வைப்பதும் அவரே. இதற்கு அவரே பதில் சொல்வார்.

3 தொகுதிகளில் தே.மு.தி.க. ஜெயித்தால் அந்தந்த தொகுதிகளில் எது முக்கியமோ, என்ன தேவையோ அது செய்து தருவோம் என்று கூறி பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News