செய்திகள்

ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2016-11-03 12:45 IST   |   Update On 2016-11-03 12:45:00 IST
ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மலிவுவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மட்டும் தகர்க்கப்படவில்லை. பல பேருடைய வீடு கட்டும் கனவும் தகர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான நிர்வாகத்தின் குறியீடு.

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய இந்த கட்டிடத்துக்கு மோசமான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனிமேல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.

தி.மு.க. 3 தொகுதி தேர்தலிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே தி.மு.க.விடம் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும், சட்டசபையில் முறையாக செயல்படாமல் வெளிநடப்புதான் செய்தார்கள். எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

இந்த இடைத்தேர்தல் ஒரு மாற்று அரசியலாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற நிர்வாகத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

காவிரி பிரச்சனை என்பது தமிழகம் - கர்நாடக இரு மாநில பிரச்சனை. அதில் பிரதமர் தலையிட வேண்டியதில்லை. ஏன் இதில் மத்திய அரசை குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாத காங்கிரஸ் அரசை ஏன் யாரும் குறை கூறுவதில்லை.

மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவது தவறான கருத்து.

இன்னும் பல நல்ல திட்டங்கள் மத்திய அரசால் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும்.

நடைபெற உள்ள 3 தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒருநல்ல நிர்வாகம் வேண்டும். சென்னையில் முதியோர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்து விட்டது. ஆனால் மழைக்கான முன்னேற்பாடுகளை அரசு நிர்வாகம் இன்னும் முடுக்கிவிடாமல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News