செய்திகள்

கர்நாடகத்தில் வன்முறை: தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்- திருமாவளவன் பேட்டி

Published On 2016-09-17 07:04 GMT   |   Update On 2016-09-17 11:43 GMT
கர்நாடகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் விடுதலைசிறுத்தை நேற்று 60 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை ஆனார்கள். அத்துடன் முழு அடைப்பு போராட்டம் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

கர்நாடகத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் போன்றவற்றிற்கு சிறுபாதிப்பும் இல்லாத வகையில் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது அரசியல் அரங்கில் ஒரு வரலாற்று பதிவாகும்.

ஆளும் கட்சியினர் இதில் பங்கேற்காதது மிகுந்த வேதனைக்குரியதாகும். தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்குஅரசியல் ரீதியான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினைக்காக தீ குளித்து உயிர் இழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் இணைந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பிரதமர் உடனடியாக புதுச்சேரி உள்பட தென் மாநில முதல்வர்களை அழைத்து நதிநீர் சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். தேதிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசிய மந்திய மந்திரி சதானந்தா கவுடாவை நீக்க வேண்டும்.

நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆளுங்கட்சி எதிர் கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைத்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News