செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ரூ.10.10 கோடியில் சொந்த கட்டிடங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

Published On 2016-09-01 14:45 IST   |   Update On 2016-09-02 15:12:00 IST
பூந்தமல்லி, இலுப்பூர், ஆம்பூர், முசிறி, திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ரூ.10.10 கோடியில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஓட்டுநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனத்திற்கான புதிய அனுமதிச் சீட்டு, அனுமதிச் சீட்டு புதுப்பித்தல், வரி நிலுவை இல்லாச் சான்று, மறு பதிவுக்கான அனுமதி, தடையில்லாச் சான்று மற்றும் பன்னாட்டு ஒட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, போக்குவரத்து அலுவலகங்களை நவீனமயம் ஆக்குவதுடன், பல்வேறு சேவைகளும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

1. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் போக்குவரத்து அலுவலகங்களில் தேவையான வசதிகள் இருப்பதில்லை. எனவே தான், கடந்த 5 ஆண்டுகளில் 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், 5 பகுதி அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பூந்தமல்லி மற்றும் திருப்பூர் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு 5 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

2. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஆகிய பகுதி அலுவலகங்களுக்கு 4 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News