செய்திகள்

தேர்தல் வாக்குறுதியின்படி மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்வு: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Published On 2016-09-01 13:08 IST   |   Update On 2016-09-01 17:14:00 IST
தாய்மார்களுக்கு பேறுகால சலுகையாக வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை:

தாய்மார்களுக்கு பேறுகால சலுகையாக வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன்கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நான் 2011-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.

எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

Similar News