செய்திகள்

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டது: கனிமொழி எம்.பி. பிரசாரம்

Published On 2016-05-04 12:12 IST   |   Update On 2016-05-04 16:02:00 IST
சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

சீர்காழி:

சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான். விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கலைஞர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். முதல்- அமைச்சர் ஆனதும் அவர் போடும் முதல் கையெழுத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான கையெழுத்துதான்.

மக்களையும், மக்களுக்கான பிரச்சனைகளையும் நேரடியாக சந்தித்து அவர்களது பிரச்சனைகளை உடனே தீர்த்து வைக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான்.

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்றாவது மக்களை சந்தித்து உண்டா, பிரச்சனைகளை தீர்த்ததுண்டா அப்படிப்பட்ட முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவையா? கடந்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை கொண்டுவராத ஜெயலலிதா தற்போது கலைஞர் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை கொண்டு வருவேன் என கூறியவுடன். ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன் என கூறிவருவது நியாயமா?

இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை பல இடங்களில் வேலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லையென்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

மின்வெட்டினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை வாய்ப்பை இலந்துள்ளனர். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை மீட்க ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர்களிடம் இருந்து இலங்கை அரசு கைபற்றிய படகுகளை திருப்பி பெற்றுதரவும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். மீன்பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும். கொள்ளிடம், பாலாறு, வெண்ணாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.

கடலோர கிராமங்களில் கடல்நீர் உட்புகாதவாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் வேதாரண்யம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவ:–

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காய்கனிகள் குளிர்பதனத்துடன் கூடிய குடோன் அமைக்கப்படும், நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும், அதே போல் ரிங்ரோடு பணி உடனடியாக துவங்கி முடிக்கப்படும்.

ஜெயலலிதா விவசாயிகளுக்கு ஒன்று கூட செய்யவில்லை தொழிற்சாலை ஒன்று கூட இல்லை. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 20–வது இடத்திற்க்கு சென்றுவிட்டது. சட்டம் ஓழுங்கு சரியில்லை பாதுகாப்பற்ற நிலைஉள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News