பெண்கள் மருத்துவம்
பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு ஏற்படும் அவஸ்தைகள்

பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன் ஏற்படும் அவஸ்தைகள்

Published On 2022-05-12 07:33 GMT   |   Update On 2022-05-12 07:33 GMT
இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு.
மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.

இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம்.

இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம்.

வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

* கோபம் தொடர்ந்து நீடித்தல்.
* வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
* சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
* காரணமில்லாமல் அழுதல்.
* தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
* மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
* கடுமையான சோர்வு.
* உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
* பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

இதர அறிகுறிகள்

சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.
கட்டுப்படுத்தும் சிகிச்சைகள்

ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News