பெண்கள் உலகம்

தாய்ப்பால் கொடுக்கும் முறை

Published On 2022-08-04 05:50 GMT   |   Update On 2022-08-04 05:50 GMT
  • தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன.
  • பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.

பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.

குழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதாரணமாக ஒதுக்கிவிடக்கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது.

பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும்.

மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது.

பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம்.

ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை.

Tags:    

Similar News