சமையல்

மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால்

Published On 2024-04-12 10:34 GMT   |   Update On 2024-04-12 10:34 GMT
  • பாரம்பரிய உணவுகளில் ஒன்று பருத்தி பால்.
  • நெஞ்சு சளிக்கு உடனே தீர்வளிக்கும் உணவாக பார்க்கப்படுகிறது.

மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால். மதுரை ஜிகர்தண்டாவை போல மேலும் ஒரு ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படுவது பருத்தி பால்.

பருத்தி பால் மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லாது, நெஞ்சு சளிக்கும் உடனே தீர்வளிக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. நிறைய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலம் தருகிறது. சரி இப்படி ஏராளமான பலன்களை தரும் பருத்தி பால் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பருத்தி கொட்டை- 2 கப்

வெல்லம் - 1 1/2 கப்

பச்சரிசி-1/4 கப்

ஏலக்காய் - 5

சுக்கு-ஒரு சிறிய துண்டு

தேங்காய் ஒரு கப்

செய்முறை

பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்திப் பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்.

இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்திக் கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின்னர் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பை சேர்க்க வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் கட்டி விழுந்து விடும்.

பருத்திப் பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்துக் கிளற வேண்டும்.

இதையடுத்து நன்றாக கொதித்த பின்னர் ஏலக்காய் மற்றும் சுக்கை நன்றாக பொடித்து பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான அளவு தேங்காயை துருவி சேர்த்துக்கொள்ளலாம். இனி சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்திப் பாலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண்-பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

Tags:    

Similar News