பொது மருத்துவம்

உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நாவல் பழம்

Published On 2025-07-09 12:38 IST   |   Update On 2025-07-09 12:38:00 IST
  • நாவல் பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
  • நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அரிய பல மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் சாலை ஓரங்களில், குளக்கரை, ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. தென்னிந்திய காடுகளிலும் இதனை காணலாம். நாவல் மரத்திற்கு நாக மரம், சாதலம், ஆருகதம், நேரேடு, நேரேடம் என்று பல பெயர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'ஜம்பலம்' என்றும் அழைக்கப்படுகிறது. நாவல் மரம் இந்தியாவில் வறண்ட நிலங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வளர்கிறது. இலங்கை, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் புத்த கோவில்களை சுற்றி நாவல் மரங்களை காணலாம். நாவல் பழங்கள் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கிடைக்கின்றன.

துவர்ப்பு கலந்த இனிப்பாகவும், ருசியாகவும் இருக்கும். காய் பச்சையாகவும் பழம் கருநீல நிறத்திலும் இருக்கும். நாவல் பழம் மூளைக்கு பலம் தரும் பழம் என்கிறார்கள், இயற்கை டாக்டர்கள்.

இது கல்லீரல் நோயை குணமாக்கும். சிறுநீரகங்களை நன்கு இயங்க செய்து சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக்கும். பழத்தை உண்ண குடல் நன்கு இயங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் குணமாகும். பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பழம் உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியைத்தரும். ரத்தத்தை சுத்தம் செய்யும். பழத்தை அதிக அளவில் உண்டால் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்படும் வாய்ப்பு குறைவு. நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நாவல் விதை பொடி நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவுகிறது என்பதால் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News