உடற்பயிற்சி
ஏக பாத சேதுபந்தாசனம்

அடிமுதுகு வலியை போக்கும் ஏக பாத சேதுபந்தாசனம்

Published On 2021-12-28 04:50 GMT   |   Update On 2021-12-28 04:50 GMT
ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக, நிலையான தன்மை, படைப்பாற்றல், அன்பு ஆகியவை வளர்கின்றன.
வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது.

ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக, நிலையான தன்மை, படைப்பாற்றல், அன்பு ஆகியவை வளர்கின்றன. பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் உருவாகிறது. தொடர்பாடல் திறனும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கின்றன.

செய்முறை

விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால் முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்கள் விரிந்து இருக்க வேண்டும்.

பின் இடுப்பைத் தரையில் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும். இடது பாதத்தைத் தரையில் நன்றாக ஊன்றி மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை மடிக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு வலது காலை மேல் நோக்கி உயர்த்தவும். வலது கால் இடுப்பிற்கு நேர் மேலாக இருக்க வேண்டும். 30 வினாடிகள் வரை இந்நிலையில் இருந்த பின் வலது காலை மடித்துத் தரையில் வைத்து ஆரம்ப நிலைக்கு வரவும். கால் மாற்றி மீண்டும் செய்யவும்.

தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சேதுபந்தாசனத்தைத் தவிர்க்கவும்.

பலன்கள்

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது; முதுகு வலியை, குறிப்பாக, அடிமுதுகு வலியைப் போக்குகிறது. தோள்களைப் பலப்படுத்துகிறது. கழுத்துத் தசைகளை உறுதிப்படுத்துகிறது. சேதுபந்தாசனம் பயில்வதில் தைராய்டு சுரப்பிக்கு ஏற்படும் நன்மைகள் இவ்வாசனத்தில் மேலும் அதிகரிக்கின்றன.

நுரையீரலைப் பலப்படுத்தி ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது. உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
அசீரணத்தைப் போக்குகிறது.

தலைவலியைப் போக்க உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது. கால்களில் சோர்வைப் போக்குகிறது; கால் தசைகளைப் பலப்படுத்துகிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது.
Tags:    

Similar News