700 வீடுகளுக்கு பல மடங்கு மின் கட்டண உயர்வு
- நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று நேரில் சென்ற பணியா ளர்கள் கணக்கீடு செய்தனர்.
- இதுவரை 180 ரூபாய் கட்டணமாக வந்த நிலையில் திடீரென, ரூ.18,870 ரூபாய் அதிக கட்டணம் வந்ததாக மெசேஜ் அனுப்பி உள்ளனர்
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பாரதிபுரம், சஞ்சலஅள்ளி, பனைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு பல மாதங்களாக நேரில் சென்று மின் கணக்காளர் முறையாக மின் கணக்கீடு செய்யாமல், அலுவலகத்தில் இருந்தபடியே கணக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று நேரில் சென்ற பணியா ளர்கள் கணக்கீடு செய்த போது இதுவரை 180 ரூபாய் கட்டணமாக வந்த நிலையில் திடீரென, ரூ.18,870 ரூபாய் அதிக கட்டணம் வந்ததாக மெசேஜ் அனுப்பி உள்ளனர்.
இதேபோல் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இது போன்ற 700-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கு மேற்பட்ட உள்ளூர் பொதுமக்கள், பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மின்வாரிய அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல், அலட்சிய போக்குடன் பதில் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டு அலுவலகத்திற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.