வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம்

Published On 2022-06-28 08:32 GMT   |   Update On 2022-06-28 08:32 GMT
  • இன்று மாலை வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
  • நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் அமா வசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள், மூலவர் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.

இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News