வழிபாடு

தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம் (உள்படம்: தேரில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயார்).

கார்த்திகை பிரம்மோற்சவ விழா 8-வது நாள்: உற்சவர் பத்மாவதி தாயார் தேரில் எழுந்தருளி பவனி

Published On 2022-11-28 06:12 GMT   |   Update On 2022-11-28 06:12 GMT
  • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
  • இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.10 மணியில் இருந்து காலை 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து ரத மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பாலாடைக்கட்டி, பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News